ஆயுத வியாபாரியுடன் தொடர்பு: மத்திய அமைச்சர் யார்?
ஆயுத வியாபாரியுடன் தொடர்பு: மத்திய அமைச்சர் யார்?
ஆயுத வியாபாரியுடன் தொடர்பு: மத்திய அமைச்சர் யார்?

புதுடில்லி : மத்திய அமைச்சர் ஒருவர், வங்கதேசத்தை சேர்ந்த ஆயுத வியாபாரியுடன், சட்டவிரோத ஆயுத பேரம் வைத் திருந்ததாகக் கூறி, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், "சம்பந் தப்பட்ட அமைச்சரின் பெயரை பகிரங்கமாக தெரிவிக்காவிட்டால், ஒட்டுமொத்த அமைச்சரவையின் மீதும் சந்தேகம் கொள்ளும் நிலை ஏற்படும்' என்றார்.
அ.தி.மு.க., - பா.ஜ., - சிவசேனா, இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், அசாம் கணபரிஷத் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களும், இந்த பிரச்னையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால், பத்து நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், மீண்டும் சபை கூடியதும், இதே பிரச்னை எதிரொலித்தது. இதையடுத்து, மீண்டும் 15 நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.பின், சபை கூடியதும் பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் பிரித்விராஜ் சவான் விளக்கம் அளித்தார்.அவர் பேசும்போது,"பத்திரிகையில் வெளியான தகவல் உண்மையா, இல்லையா என்பது குறித்து விசாரிக்கப்படும். உண்மை என தெரியவந்தால், அந்த அமைச்சரின் பெயர் பகிரங்கமாக அறிவிக்கப்படும்' என்றார்.
அமைச்சர் மறுப்பு : ஆயுத பேர விவகாரம் தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், மத்திய கிராமப்புற மேம்பாடு துறை இணை அமைச்சருமான சிசிர் குமார் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கதேச ஆயுத வியாபாரியுடன், என்னை தொடர்பு படுத்தி பத்திரிகையில் வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. மேற்கு வங்கத்தில் விரைவில் நகராட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில், திரிணமுல் கட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற அவதூறான தகவல்களை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்புகின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.